UPDATED : ஜூலை 13, 2024 01:26 PM
ADDED : ஜூலை 13, 2024 12:29 PM

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து, தலைவர்கள் கருத்து பின்வருமாறு:
ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.,
விக்கிரவாண்டி தொகுதிக்கு அருகில் உள்ள கள்ளக்குறிச்சியில் ஒரு சோக சம்பவம் நடந்தது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதில், அரசியல் சாயம் பூசப்பட்டது.
இடைத்தேர்தல் நேரத்தில் எந்த அரசுக்கும் ஏற்படாத சவால்கள் திமுக அரசுக்கு ஏற்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஏற்படாத சோதனையிலும் மக்கள் திமுகவை ஆதரித்துள்ளனர். அனைத்து சவால்களையும் முறியடித்து, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு திமுக கூட்டணியின் கொள்கை பலத்துக்கு கிடைத்துள்ள வெற்றியாகும். பா.ஜ., மற்றும் பா.ம.க இணைந்து தேர்தலை சந்தித்தது. இது கொள்கையற்ற சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.
பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தெளிவாக முடிவெடுத்து ஓட்டு அளித்துள்ளனர். அ.தி.மு.க.,வின் தலைமையை மீறி தேர்தலில் அக்கட்சியினர் ஓட்டளித்துள்ளார்கள் என்பது நிரூபணம். இது பழனிசாமிக்கு விழுந்த அடி.
திருமாவளவன், விடுதலை சிறுத்தை கட்சி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெறுவார் என முன்பே கணிக்கப்பட்ட ஒன்று தான். அ.தி.மு.க., இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி சென்றது, அரசியல் ரீதியாக அவர்கள் எடுத்த தவறான முடிவு. அ.தி.மு.க.,வை சார்ந்தவர்களும் தி.மு.க., வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளனர்.
இது தான் தி.மு.க., அதிக வித்தியாச ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிப்பதற்கு காரணம். தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு சான்று. எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை.