ADDED : ஆக 29, 2011 12:51 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடலில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பில் ஈடுபட்ட ஏழு படகுகளுக்கு, டீசல் டோக்கன் ரத்து செய்யப்பட்டது.
ராமேஸ்வரம் கடலில் மீன்பாடு குறைந்து வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பான மீன்வளத்தை அழிக்கும் இரட்டைமடி மீன்பிடிப்பில் சில மீனவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மீனவர்கள் புகார் செய்ததை தொடர்ந்து, ராமநாதபுரம் கலெக்டர் அருண் ராய் உத்தரவின்படி, நேற்று அதிகாலை மரைன் போலீஸ் ரோந்துப் படகில் எஸ்.ஐ., கணேசன், மீன் துறை உதவி இயக்குனர் வீரன், மீன் துறை இன்ஸ்பெக்டர் இளங்கோ, ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் இடையே கடல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இரட்டைமடி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தங்கச்சிமடம் ஹரிநாத், ஆல்வின், வேர்கோடு கணேசன், ராமேஸ்வரம் ஆனந்தன், முத்துராமலிங்க தேவர் நகர் கணேசன் உட்பட ஏழு மீனவர்களின் படகுகளை பிடித்தனர். படகில் இருந்த வலைகளை பறிமுதல் செய்த மீன் துறை அதிகாரிகள், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், படகுகளுக்கு டீசல் டோக்கன் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.