செப். முதல் பதிவு தபால் சேவை ரத்து; தபால் ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
செப். முதல் பதிவு தபால் சேவை ரத்து; தபால் ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 30, 2025 12:17 AM
மதுரை : தபால் துறையில் நவீனமாக்கலின் ஒருபகுதியாக செப்., முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு மாற்றாக 'ஸ்பீடு போஸ்ட்' முறையை பயன்படுத்தலாம்.
குறைந்த கட்டணம், நம்பகமான சர்வீஸ் என்ற அடிப்படையில் தபால்துறைக்கென வாடிக்கையாளர்கள் உள்ளனர். சாதாரண தபால் அனுப்பும்போது அது போய் சேர்ந்ததா, இல்லையா என உறுதிசெய்ய முடியாது. அதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவு தபால் முறை நல்ல வரவேற்பை பெற்றது. தபால் உரியவரிடம் சேர்ந்ததும் அவர் கையெழுத்துடன் ஒப்புகை சீட்டு நம் கைக்கு வந்துவிடும். தபாலின் எடையை கணக்கிட்டு பதிவு தபாலுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உடனடியாக 'டெலிவரி' என்ற அடிப்படையில் ஸ்பீடு போஸ்ட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவும் கிட்டத்தட்ட பதிவு தபால் போன்றது என்றாலும், கி.மீ., அடிப்படையில் கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. பதிவு தபாலைவிட ஸ்பீடு போஸ்ட் முறைக்குதான் தற்போது வரவேற்பு அதிகம் உள்ளது. இதை கருத்திற்கொண்டு செப்., முதல் பதிவு தபால் சேவை ரத்து செய்யப்படுவதாக தபால் துறை அறிவித்துள்ளது. அதுபோல் ரயில் மெயில் சேவையும்(ஆர்.எம்.எஸ்.,) ரத்தாகிறது. இனி இந்தியாவிற்குள் தரைவழியாக மட்டுமே தபால்கள் பிறமாநிலங்களுக்கு பட்டுவாடா செய்யப்பட உள்ளது.
பதிவுதபால், ஆர்.எம்.எஸ்., சேவை ரத்துக்கு தபால் ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.