ADDED : ஜன 30, 2024 10:19 PM
சென்னை:''தமிழகத்தில் புற்றுநோய் பரிசோதனை திட்டம் துவங்கிய 15 நாட்களில், 12 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,'' என, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறினார்.
'இந்தியாவில், 2030ம் ஆண்டுக்குள், இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் பாதிப்பு அதிகரிக்கும்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, தொற்றா நோயை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத்துறை செயல்படுத்தி உள்ளது.
தற்போது, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:
அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை கட்டுப்படுத்த, வீடு வீடாக பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் துவங்கப்பட்ட, 15 நாட்களில், 12 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
அம்மாவட்டங்களில், 52 லட்சம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட உள்ள நிலையில், மேலும் பலருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படலாம். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.