அமைச்சருக்கு எதிரான வழக்கு; சேர்த்து விசாரிக்க தடையில்லை
அமைச்சருக்கு எதிரான வழக்கு; சேர்த்து விசாரிக்க தடையில்லை
ADDED : மார் 29, 2025 06:59 AM

சென்னை; அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
போக்குவரத்துத் துறையில் பணி நியமனங்களுக்கு, பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி எதிராக உள்ள வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
மனுதாரர் அமைப்பு சார்பில், வழக்கறிஞர் என்.சுப்பிரமணியன் ஆஜராகி, ''சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்குகளை சேர்த்து விசாரிக்க அதிகாரம் இல்லை. குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து விசாரித்தால், ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் விசாரணை முடியாது,'' என்றார்.
காவல் துறை தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், ''வழக்குகளை சேர்த்து விசாரிப்பது குறித்து, உச்ச நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனித்தனியாக விசாரிப்பதிலும், அரசுக்கு ஆட்சேபனை இல்லை,'' என்றார்.
காவல் துறை தரப்பு வாதத்தை ஏற்று, ஊழல் எதிர்ப்பு இயக்கம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.