'தேசிய தலைவர்' படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
'தேசிய தலைவர்' படத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : அக் 25, 2025 01:42 AM
மதுரை: தேசிய தலைவர் படத்திற்கு தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சக்கரவர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு:
தேசிய தலைவர் படத்தை இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கிஉள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியானது. இப்படம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கதாநாயகனாக சித்தரிக்கிறது.
இதில், கதாநாயகனாக நடித்துள்ளவர், 'ராமநாதபுரம் மாவட்டத்தில் என்னை எதிர்க்க யார் இருக்கிறார்கள்' என பேசுவது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரு பிரிவினரிடையேயான சர்ச்சை தான் கதை என்பது தெளிவாகிறது.
இது பொது ஒழுங்கிற்கு எதிரானதாக இருக்கும். இரு சமூகங்களுக்கிடையில் மோதல் ஏற்பட வழிவகுக்கும்.
படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்று வழங்க தடை விதிக்க வேண்டும். படத்தை தியேட்டர்களில் திரையிட அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜிவ் காந்தி, ''படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு திரையிட வேண்டும்'' என்றார். நீதிபதிகள், 'ஏற்கனவே திரைப்பட சான்று வாரியம் சான்று வழங்கியுள்ளது' என, தெரிவித்தனர்.
பின், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவர், மண்டல அலுவலர், தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அக்., 28ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

