சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் தவிர்க்க வழக்கு
சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் தவிர்க்க வழக்கு
ADDED : நவ 05, 2024 01:06 AM

மதுரை : கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகளின் வாக்கு மூலத்தில் ஜாதி, மதம் பதிவிடுவதை தவிர்க்க தாக்கலான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை வழக்கறிஞர் கோகுல் அபிமன்யூ தாக்கல் செய்த பொதுநல மனு:
குற்ற வழக்குகளில், கீழமை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவு செய்யப்படுகிறது. முகவரியை பதிவு செய்யலாம்.
ஜாதி, மதத்தை குறிப்பிடுவதை அறிந்து நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் அல்லது நீதிமன்ற அலுவலர்கள் யாரேனும் பாரபட்சமாக செயல்பட வாய்ப்பு உள்ளது.
சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்கள், வழக்கில் எந்த பங்கும் வகிப்பதில்லை. அதை அறிந்து கொள்ளாமலேயே கீழமை நீதிமன்றங்கள் வழக்கை முடிக்க இயலும்.
உயர் நீதிமன்றங்கள் அல்லது கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மனுதாரர்களின் வழக்கு ஆவணம், மெமோவில் சம்பந்தப்பட்ட நபர்களின் ஜாதி, மதம் இடம் பெறக்கூடாது. இதை அனைத்து உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், கீழமை நீதிமன்றங்கள் சாட்சிகளின் ஜாதி, மதம் விபரங்களை கோரும் நடைமுறையை கைவிடவில்லை. பாரபட்சமற்ற முறையில், நீதி வழங்குவதே நீதித்துறையின் நோக்கம்.
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலுக்கு மனு அனுப்பினேன். சாட்சிகளின் வாக்குமூலத்தில் ஜாதி, மதம் பதிவிட விபரம் கோருவதை தவிர்க்க கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பு வழக்கறிஞர், 'மெமொ, சிவில் வழக்கு ஆவணங்களில் ஜாதி, மதம் குறிப்பிடுவதை தவிர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சி களின் வாக்குமூலத்தில் அவற்றை தவிர்ப்பது பற்றி உத்தரவில் தெளிவுபடுத்தவில்லை.
'இது தொடர்பான விவகாரம், சென்னை உயர் நீதிமன்ற குற்றவியல் விதிமுறைகள் குழுவில் நிலுவையில் உள்ளது. அது முடிவெடுக்க வேண்டியுள்ளது' என்று, தெரிவித்தார்.
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தரப்பில் நவம்பர், 21ல் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.