கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது காவிரி நீர்!
கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது காவிரி நீர்!
ADDED : செப் 13, 2026 12:37 PM

மயிலாடுதுறை: கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தை வந்தடைந்தது காவிரி நீர்- சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி காவிரி அன்னையை வரவேற்று நொடிக்கு 800 கன அடி தண்ணீரை நீர்வள ஆதாரத்துறையினர் திறந்து விட்டனர்.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தமிழக முதல்வர் விஜய் காவிரியில் தண்ணீரை திறந்து விட்டார். இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்லணைக்கு வந்து சேர்ந்த காவிரி நீர் செப்டம்பர் 6ம் தேதி திறக்கப்பட்ட நிலையில் காவிரி நீர் இன்று காலை காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு முதல் கதவணைக்கு வந்த சேர்ந்தது. காவிரி விக்ரமண் ஆற்றின் தலைப்பு பகுதியில் உள்ள நீரொழுங்கிக்கு வந்தடைந்த தண்ணீர் தேக்கப்பட்டு. நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் யாஷிகா தலைமையில் நீரொழுங்கி சட்ரஸ்சிற்கு சிறப்பு பூஜைகள் செய்து நொடிக்கு 800 கன அடி நீரை பாசனத்திற்காக திறந்து விட்டனர்.
பொதுமக்கள், விவசாயிகள் காவிரி அன்னையை மலர்தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்று வணங்கினர். மேட்டூர் அணையின் விதிகளின் படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன்னதாக, மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்த பின்னர், மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படும். இதன் படி இன்னும் ஓரிரு தினங்களில், தண்ணீர் பாசனத்திற்காக பகிர்ந்து அளிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 40 ஆயிரம் ஏக்கரில் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
