'பெரிய பதவியில் இருப்போரை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்'
'பெரிய பதவியில் இருப்போரை சி.பி.ஐ., கைது செய்ய வேண்டும்'
ADDED : பிப் 06, 2026 03:06 AM

சென்னை:''நகை திருடு போனதாக பொய் புகார் அளித்த நிகிதா மீதும், என் மகனை அடித்தே கொலை செய்ய உத்தரவிட்ட பெரிய பதவியில் இருப்போர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கோவில் காவலாளி அஜித்குமாரின் தாய் மாலதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் காவலாளியான, அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 29, நகை திருடியதாக, தனிப்படை போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'அஜித்குமார் நகையை திருடியதாக நிகிதா என்பவர் பொய் புகார் அளித்து இருப்பது விசார ணையில் உறுதியாகி உள்ளது' என்று, கூறியுள்ளனர்.
இந்நிலையில், மடப்புரத்தில் அஜித்குமாரின் தாய் மாலதி நேற்று கூறியதாவது:
என் மகனை கொன்ற போலீசார் ஐந்து பேரையும் ஜாமினில் வெளியே விட முடியாது என, நீதிபதி ஸ்ரீமதி தெரிவித்து இருப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
என் மகன் மீது திருட்டு பழி சுமத்தி, அவனை ஒரு பயங்கரவாதி போல தலைகீழாக தொங்க விட்டு, அவன் மீது மிளகாய் பொடி துாவி, உயிர் நாடியில் எட்டி உதைத்து சித்ரவதை செய்து கொன்று விட்டனர்.
என் மகன் நகையை திருடி இருக்க மாட்டான்; அவனை விட்டு விடுங்கள் என, போலீசாரிடம் கதறினேன்.ஆனாலும், கடைசியில் உயிரற்ற பிணமாகவே அவனை பார்த்தேன்.
பொய் புகார் அளித்த நிகிதாவையும், அவருக்கு சிபாரிசு செய்து, டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படையை ஏவி, என் மகனை கொன்ற பெரிய பதவியில் இருக்கும் நபர்களையும், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

