தமிழகத்திற்கு மத்திய அரசு தந்தது ரூ.10.76 லட்சம் கோடி: அண்ணாமலை
தமிழகத்திற்கு மத்திய அரசு தந்தது ரூ.10.76 லட்சம் கோடி: அண்ணாமலை
UPDATED : பிப் 10, 2024 03:18 AM
ADDED : பிப் 10, 2024 12:18 AM

சென்னை:'மத்திய பா.ஜ., ஆட்சியில், தமிழகத்திற்கு திட்டங்கள், உதவி தொகை, நிதி பங்கீட்டின் மதிப்பு என, 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
நிர்வாக குளறுபடிகளால், பொதுமக்கள் தி.மு.க., அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதை திசை திருப்ப, ஏற்கனவே பல முறை தெளிவுபடுத்திய, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களில், மீண்டும் ஒரு முறை பொய் கூறியிருக்கின்றனர்.
ஆட்சியில் இருக்கும்போது, ஊழல் செய்வதில் மட்டும் கவனமாக இருந்துவிட்டு, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும், மாநில உரிமைகள் பற்றி பேசும் தி.மு.க.,வின் நாடகத்தை, தமிழக மக்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றனர்.
நிதித் துறையில் அனுபவம் பெற்ற ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் சம்பாதித்ததை எளிதாக கண்டறிந்த, தமிழக முன்னாள் நிதி அமைச்சர் போன்றவர்களிடம், பொய் சொல்பவர்கள் ஆலோசனை கேட்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வரி பகிர்வு, 32 சதவீதம்; 2004 - 2014 காலகட்டத்தில் வழங்கப்பட்ட வரி பங்கீடு, 94,977 கோடி ரூபாய் மட்டுமே. அந்த காலத்தில் தமிழகத்திற்கு வழங்கிய உதவி தொகை, 57,924 கோடி ரூபாய்.
மத்திய பா.ஜ., ஆட்சியில், மாநிலங்களுக்கு உயர்த்தப்பட்ட வரி பகிர்வு, 42 சதவீதம்; கடந்த10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கிய வரி பங்கீடு, 2.77 லட்சம் கோடி ரூபாய். தமிழகத்திற்கு வழங்கிய உதவி தொகை, 2.30 லட்சம் கோடி ரூபாய்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 6,412 கோடி ரூபாய் தமிழக உள்கட்டமைப்பை மேம்படுத்த, 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் உதவியாக, மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கான திட்டங்கள், உதவி தொகை நிதி பங்கீட்டின் மதிப்பு என, 10.76 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நேரடி வரி பங்களிப்பான, 5.16 லட்சம் கோடி ரூபாயை விட, இரு மடங்கு அதிகம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.