விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' செயலி
விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' செயலி
ADDED : நவ 19, 2025 05:05 AM

சென்னை: நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸியில் பயணிக்க வசதியாக, 'பாரத் டாக்ஸி' செயலி, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது. நகரங்களில், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளில் பயணிப்போர் எண்ணிக்கை, அதிகரித்தபடி உள்ளது.
'இ - மெயில்' ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகளை முன்பதிவு செய்ய, தனியார் செயலிகள் உள்ளன. இவற்றில், பயண துாரத்திற்கு, நிரந்தர கட்டணம் இல்லை.
பயணியர் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில், பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணியர் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நாடு முழுதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த கட்டணத்தில், பொதுமக்கள் பயணிக்க வசதியாக, 'பாரத் டாக்ஸி' உருவாக்கப் பட்டுள்ளது.
இதற்கான சோதனை நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில், டில்லியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்பின், படிப்படியாக மற்ற நகரங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, பெயர், 'இ - மெயில்' முகவரி, மொபைல் போன் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்து பயன்படுத்தலாம்.
வரவேற்கத்தக்கது இதுகுறித்து, அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
எரிபொருள் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைத்து, 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
இதனால், இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். பெரும்பாலான மாநிலங்களில், ஆட்டோ கட்டணம், எரிபொருள் செலவுக்கு ஏற்ப, அவ்வப்போது மாற்றம் செய்யப்படுகிறது.
அதுபோல், மாநில அரசே பொது செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மேற்கண்ட இரண்டும் இல்லாத நிலையில், நாங்கள் கஷ்டப்படுகிறோம். மற்றொருபுறம் தனியார் செயலிகளில், அடிக்கடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வரும் 'பாரத் டாக்ஸி' செயலி மிகவும் வரவேற்கத்தக்கது; இதற்கான, முதல் தேவை தமிழகம் தான்.
எனவே, டில்லியில் அறிமுகம் செய்யும்போதே, சென்னையிலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

