சான்றிதழ் கொளுத்தும் போராட்டம்: தடுத்து நிறுத்திய போலீஸ்
சான்றிதழ் கொளுத்தும் போராட்டம்: தடுத்து நிறுத்திய போலீஸ்
ADDED : ஆக 15, 2026 11:02 PM
சென்னை: யோகா பயிற்சி சான்றிதழ்களை கொளுத்தும் முயற்சியை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவ மனையில், தமிழ்நாடு பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தினர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலையின்றி தவிப்பதாகக் கூறி, தாங்கள் பெற்ற யோகா சான்றிதழை கொளுத்த முயன்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தியதால் அப்போராட்டம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து, அச்சங்கத்தின் செயலர் காசிநாததுரை கூறியதாவது:
மத்திய யோகா அமைச்சங்கத்தின் நிதியுதவியுடன், அரசு ஆரம்ப சித்தா மருத்துவமனைகள், அரசு பள்ளிகளில், யோகா பயிற்சியாளர்கள் பணியாற்றினர். அவர்களை திடீரென பணியில் இருந்து அரசு நீக்கியது.
அதேநேரம், பணியாற்றியவர்களுக்கு வழங்க வேண்டிய, 1.56 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்காமல் உள்ளனர்.
தமிழகத்தில் யோகா சான்றிதழ் படிப்பை முடித்து, 2 லட்சம் பேர் உள்ளனர். மற்ற மாநிலங்களில் யோகா பயிற்சியாளர்களுக்கு, அரசே வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
குறிப்பாக மாணவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் அரசு கண்டு கொள்ளாததால், சான்றிதழ்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட முயன்றோம்.
ஆனால், போலீசார் தடுத்து விட்டனர். துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் பேசினோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
