புலிகள் அமைப்பை புனரமைக்க ஆயுதம் கடத்திய சினிமா பிரமுகர் மீது குற்றப்பத்திரிகை
புலிகள் அமைப்பை புனரமைக்க ஆயுதம் கடத்திய சினிமா பிரமுகர் மீது குற்றப்பத்திரிகை
ADDED : பிப் 18, 2024 03:15 AM

சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்பை புனரமைக்க, பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கடத்திய வழக்கில் கைதான, சினிமா பிரமுகர் ஆதிலிங்கம் மீது, என்.ஐ.ஏ., அதிகாரி கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த, 2021ல் கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் கடற்பகுதியில், மர்ம படகு ஒன்றை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மடக்கினர்.
துப்பாக்கிகள்
அதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், 9 எம்.எம்., ரக துப்பாக்கியில் பயன்படுத்தும், 1,000 தோட்டாக்கள் இருந்தன.
இவற்றை பறிமுதல் செய்து, இலங்கையை சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர்.
விசாரணையில், விடுதலைப் புலிகள் அமைப்பை புனரமைக்க, பாகிஸ்தானில் இருந்து ஈரான் மற்றும் கேரளா வழியாக, இலங்கைக்கு போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அவர்கள் நடத்திய தொடர் விசாரணையில், திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் குணசேகரன், புஷ்பராஜா எனும் பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின் உள்ளிட்டோர், இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதற்கு மூளையாக, சென்னை வளசரவாக்கத்தில் பதுங்கி இருந்த, விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவில் செயல்பட்ட சபேசன் எனும் சற்குணம், சேலையூரில் தங்கி இருந்த முன்னாள் ராணுவ வீரரும், சினிமா பிரமுகருமான ஆதிலிங்கம், 43, ஆகியோர் செயல்பட்டுள்ளனர்.
ஹவாலா ஏஜன்ட்
ஆதிலிங்கம், நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியிடம், சில மாதங்கள் மேலாளராக பணிபுரிந்து உள்ளார். ஹவாலா பண ஏஜன்டாகவும் செயல்பட்டு வந்த ஆதிலிங்கம், சினிமா படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் இவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், 2023 ஆகஸ்டில் கைது செய்தனர். இவர் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.