தொடர் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்; செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்; செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
UPDATED : அக் 22, 2025 10:30 AM
ADDED : அக் 22, 2025 09:39 AM

சென்னை: தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் அல்லாது காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன.
இந் நிலையில், இடைவிடாத மழை எதிரொலியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 100 அடி நீர் வீதம் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் மாலையில் 1800 கனஅடியாக காணப்பட்டது.
தற்போது, ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 1800 கன அடியில் இருநது இன்று (அக்.22) காலை நிலவரப்படி 2170 கன அடியாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது.
ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில் தற்போது 2815 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மழை மேலும் நீடிக்கும் என்பதால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கக்கூடும். இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.