சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூர கொலை; இபிஎஸ், அண்ணாமலை கடும் கண்டனம்
சென்னையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் கொடூர கொலை; இபிஎஸ், அண்ணாமலை கடும் கண்டனம்
ADDED : ஜன 28, 2026 08:22 PM

சென்னை: சென்னையில் புலம்பெயர் தொழிலாளி குடும்பத்துடன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை;
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீஹார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்.
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மஹாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழகத்தில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது, 'வந்தாரை வாழ வைக்கும்' தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் முதல்வர் ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்? இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறி உள்ளார்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை;
சென்னையின் மையப்பகுதியில் இதுபோன்ற ஒரு கொடூரமான குற்றம் நிகழ்ந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஊழல் நிறைந்த திமுக அரசில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பி உள்ளது.
பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி கவுரவ் குமார் அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு வயது மகனுடன், ஒரு கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும், கவுரவ் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுரவ் மனைவியை பாதுகாக்க முயன்றபோது, அவர் கொல்லப்பட்டார், அதன் பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அவரது மனைவியையும், குழந்தையையும் கொலை செய்தனர்.
கவுரவ் குமாரின் உடல் சென்னையில் பரபரப்பான சாலையில் ஒரு சாக்குப்பையில் கட்டி மூட்டையாக வீசப்பட்டது. குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மனைவியின் உடலை போலீசார் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. திமுக அரசின் கீழ் சென்னை பாதுகாப்பானதா?
ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு இல்லை என்பதின் கொடூர பிரதிபலிப்பாக இந்த சம்பவம் நிற்கிறது. மாநில தலைநகரில் கூட உயிர் மற்றும் பாதுகாப்புக்கான அடிப்படை உரிமை செல்லரித்துவிட்டதாக தெரிகிறது.

