சபாஷ் சரவணன்; நேர்மையாளரை கவுரவித்த சென்னை போலீஸ்!
சபாஷ் சரவணன்; நேர்மையாளரை கவுரவித்த சென்னை போலீஸ்!
ADDED : பிப் 17, 2025 02:28 PM

சென்னை: ஆட்டோவில் பயணி தவறவிட்ட 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ஹைதராபாத், பராசக்தி நகரைச் சேர்ந்தவர் நித்திஷ் 39; தனியார் நிறுவன ஊழியர். இவர், உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக, மனைவி மற்றும் தந்தையுடன், சென்னை, அரும்பாக்கத்திற்கு வந்தார். அங்கிருந்து, மூவரும், கிழக்கு முகப்பேரைச் சேர்ந்த சரவணன், 40, என்பவரின் ஆட்டோவில், அண்ணா நகர் 'ஏ - பி' பிளாக்கில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இறங்கிய பின், சரவணன் அங்கிருந்து சிறிது துாரம் சென்றபோது, பயணி அமரும் இருக்கையில் பை ஒன்று இருப்பதை கவனித்துள்ளார். அதை சோதித்தபோது, தங்க நகைகள் இருந்துள்ளன. உடனடியாக, அதே பகுதியில் உள்ள அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில், நகைகளை சரவணன் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரித்து, விடுதியில் தங்கி இருந்த நித்திஷ் குடும்பத்தினரை அழைத்து, ஆய்வு செய்து 40 சவரன் நகைகள் மற்றும் டேப்பை, சரவணன் வாயிலாகவே உரியவர்களிடம் ஒப்படைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் சரவணனின் நேர்மையை, போலீசார், நித்திஷ் மற்றும் குடும்பத்தினர் பாராட்டினர்.
இந்நிலையில், இன்று (பிப்.,17) ஆட்டோ டிரைவர் சரவணனை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டி வெகுமதி வழங்கினார். இது குறித்து சென்னை போலீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' Honesty truly pays off. நேர்மை உண்மையிலேயே பலனளிக்கும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.