மழை குறைந்ததால் மாறியது காட்சி; வெள்ள நீர் அகற்றும் பணி தீவிரம்
மழை குறைந்ததால் மாறியது காட்சி; வெள்ள நீர் அகற்றும் பணி தீவிரம்
ADDED : அக் 16, 2024 10:19 AM

சென்னை: சென்னையில் மழையின் போது தண்ணீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவில மையம் கொண்டு, 12 கி.மீ.,வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. 30 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாது மழை பெய்ததால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல காட்சி அளித்தது.
அதீத கனமழை அறிவிப்பை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. சென்னையில் மண்டலங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கிய 539 இடங்களில் 436 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. எஞ்சிய 103 இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றம் பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.
2 நாட்களாக பெய்த மழையின் போது 54 மரங்கள் விழுந்திருந்தன. அவை அனைத்தும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. 27 இடங்களில் 300 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் பொதுமக்கள் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 944 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். 100 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5657 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.