சென்னையை நள்ளிரவு 'நனைத்த' மழை; மணலியில் 14 செ.மீ., பதிவு
சென்னையை நள்ளிரவு 'நனைத்த' மழை; மணலியில் 14 செ.மீ., பதிவு
UPDATED : செப் 24, 2024 06:59 PM
ADDED : செப் 24, 2024 07:56 AM

சென்னை: சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக மணலியில் 14.49 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பருவமழை முற்றிலும் மாறி இருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்தது. உஷ்ணத்தின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மக்கள் தவித்தனர்.
இந்நிலையில் தலைநகர் சென்னையில் நேற்றிரவு எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டிது. நகரின் பல இடங்களில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
அதிகபட்சமாக மணலியில் நேற்று 14.49 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. மதுரவாயல், வானகரம் பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பதிவாகி இருக்கிறது. வளசரவாக்கத்தில் 7 செ.மீ.,மழை பெய்துள்ளது. மழையின் காரணமாக ஆங்காங்கே மின் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே, மத்திய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் என்றதால் சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.