தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேர்தல் கமிஷன் செய்யும் சதி: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
ADDED : அக் 27, 2025 08:33 PM

சென்னை: ''வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது'', என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாஜவுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீஹாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழகம் போராடும். தமிழகம் வெல்லும்! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

