தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்; புதிய மருந்தக திட்டம் அறிவிப்பு
தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்; புதிய மருந்தக திட்டம் அறிவிப்பு
UPDATED : ஆக 15, 2024 02:44 PM
ADDED : ஆக 15, 2024 09:05 AM

சென்னை: நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும், தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்திய ராணுவத்தை உருவாக்கியபோது நேதாஜியுடன் கரம் கோர்த்தவர்கள் தமிழர்கள். 2021ல் தி.மு.க., ஆட்சியமைந்தது முதல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.,க்கு கோவையில் திருவுருச் சிலை, விடுதலைப்போராட்ட அஞ்சலையம்மாளுக்கு கடலூரில் திருவுருவச்சிலை, ரெட்டமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம், தூத்துக்குடியில் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோருக்கு சிலை அமைக்கப்பட்டிருப்பதாக பட்டியலிட்டார்.
75 ஆயிரம் பணியிடங்கள்
2026 ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், 14,54,712 பேர் நேரடியாகவும், 12 லட்சத்தி 35 ஆயிரத்து 945 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை பெறுகின்றனர். முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். பொங்கல் முதல் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
விருது பெற்றவர்களின் விபரம்:
குமரி ஆனந்தன் - தகைசால் தமிழர் விருது
வீரமுத்துவேல், சந்திராயன் 3 திட்ட இயக்குநர் - டாக்டர் அப்துல்கலாம் விருது
சபீனா, செவிலியர், நீலகிரி - துணிவு மற்றும் சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது
டாக்டர் விஜயலட்சுமி, செங்கல்பட்டு - மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்
வித்யாசாகர், சென்னை - மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த நிறுவனம்
சந்தானம் பேக்கேஜிங் பிரைவேட் நிறுவனம் - மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய நிறுவனம்
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி - சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
முதல்வரின் நல் ஆளுமை விருது
தரவு தூய்மை திட்டம் விருது - வனிதா, தலைமை தொழில்நுட்ப அதிகாரி, முதல்வரின் முகவரித்துறை
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி - இளம்பகவத், இயக்குநர், பொதுநூலகங்கள் துறை -
மூளைச்சாவு கொடையாளியின் உறுப்புக்கொடை - டாக்டர். கோபாலகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்த்துறை
முதல்வரின் காலை உணவுத் திட்டம் - திவ்யதர்ஷினி, மேலாண்மை இயக்குநர், தமிழக பெண்கள் மேம்பாட்டுக் கழகம்
நான் முதல்வன் திட்டம் - இன்னசென்ட் திவ்யா, மேலாண்மை இயக்குநர், தமிழக திறன் மேம்பாட்டுக் கழகம்
முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள்
ஆண்கள் பிரிவு
கதிரவன் - ஈரோடு
ஜோஷன் ரெகோபெர்ட் - கன்னியாகுமரி
ஜெயராஜ் - கடலூர்
பெண்கள் பிரிவு
நிகிதா - கடலூர்
கவின் பாரதி - புதுக்கோட்டை
உமாதேவி - விருதுநகர்
ஆயிஷா பர்வீன் - ராமநாதபுரம்
சுகாதாரத்துறை அமைச்சர் பாராட்டு
சென்னையில் நடந்த 78வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் விருதுபெற்றவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.
மூளைச்சாவு அடைந்தவர்களிடத்தில் உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக, 'நல்லாளுமை'விருது பெற்ற டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன், வயநாடு நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பல உயிர்களை காப்பாற்றியதற்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற நீலகிரி-கூடலூர் செவிலியர் ஆ.சபீனா,
சென்னை மாநகராட்சியில் 'சிறப்பாக செயல்படும் மண்டலமாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14வது மண்டலக்குழு தலைவர் பெருங்குடி ரவிச்சந்திரன் ஆகியோருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார்.