டி.டி. தொலைக்காட்சியில் ஹிந்தி மாதம் நிறைவு விழா! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
டி.டி. தொலைக்காட்சியில் ஹிந்தி மாதம் நிறைவு விழா! பிரதமருக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்
ADDED : அக் 18, 2024 03:15 PM

சென்னை; ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளதாவது;
சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து அக்டோபர் 18ம் தேதி அன்று நிறைவடையும் ஹிந்தி மாத நிறைவுவிழா நடைபெறுவது குறித்து பிரதமர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வரவே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இந்திய அரசமைப்புச்சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல். நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், ஹிந்திக்கு தனி இடம் அளிப்பதும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
எனவே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற ஹிந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம். மத்திய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாத கொண்டாட்டங்களையும் அதே போல் கொண்டாட வேண்டும்.
இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதே போன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம். இது அனைவரிடையேயும் ஒரு சுமூகமான உறவை மேம்படுத்தும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.