தமிழகத்தை டில்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது; முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தை டில்லியில் இருந்து ஆளும் நிலை வரக்கூடாது; முதல்வர் ஸ்டாலின்
UPDATED : பிப் 25, 2026 12:40 PM
ADDED : பிப் 25, 2026 12:09 PM

கன்னியாகுமரி: 'தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது,' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு அவர் பேசியதாவது; இந்திய துணைக்கண்டத்தின் துவக்கமான வள்ளுவர் முனை இருக்கும் குமரி மாவட்டத்திற்கு நான் வந்திருக்கிறேன். தனித்துவமான பண்பாடு, உணவு, இயற்கை அழகு நிறைந்திருக்கும் மாவட்டம். என்எஸ் கிருஷ்ணன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை போன்ற தலைவர்களை தந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். இஸ்ரோ அமைப்புக்கு எத்தனையோ தலைவர்களை தந்த மாவட்டம்.
2004ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டிக் கொடுத்தாலும், அரசு நிலம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்தது. சொந்த வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வரன்முறைபடுத்தப்பட்ட பட்டா இன்று வழங்கப்படுகிறது. வானியக்குடியில் ரூ.180 கோடியில் புதிய துறைமுகம். ரூ.253 கோடி மதிப்பில் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.
ஆளக்கூடாது
ஆட்சிப் பொறுப்பை என்னிடம் வழங்கிய மக்களுக்காக என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் சமயத்தில் மட்டும் சிலர் உங்களை வட்டமடிப்பார்கள். பிரதமர் மோடி இன்னும் அடிக்கடி தமிழகம் வருவார். அவர் வருவதை நினைத்து கூட்டணி கட்சிகளே பயப்படுகிறார்கள். ஏனெனில் பிரதமர் எவ்வளவு முறை இங்கு வருகிறாரோ, அந்த அளவுக்கான வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தோல்வியை அடையும். தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படும். டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை வரக் கூடாது. இதைத் தீர்மானிக்கக் கூடிய தேர்தல் தான் வருகிறது.
பாஜவினருக்கு கேள்வி
பாஜவினரிடம் நேரடியாக கேட்கிறேன், எப்போது தான் வன்முறையை விட்டு விட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீங்க. பிரிவினைவாதத்தையும், வெறுப்பையும் விதைக்கும் முயற்சியை நிறுத்திவிட்டு, தமிழகத்திற்கு நல்ல விஷயம் பற்றி பேசப் போறீங்க. தமிழகத்தை தொடர்ந்து குறை சொல்லி பேசுகிறீர்கள். அதற்கு உங்களுக்கு தகுதி இருக்கா? தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, நம்முடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா?
இவங்களுக்கு கிடைத்த சரியான ஆள் தான் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ். நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவோம் என்று வடை சுட்ட மாதிரி, இபிஎஸ் வாய்க்கு வந்த மாதிரி வடை சுட்டு வருகிறார். இதை மக்கள் நம்ப தயாராக இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.

