லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி! தொண்டர்களை கலகலப்பாக்கிய அமைச்சர்
லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி! தொண்டர்களை கலகலப்பாக்கிய அமைச்சர்
ADDED : டிச 08, 2024 06:16 PM

சென்னை: லாட்டரி டிக்கெட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசி உள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது தா.மோ. அன்பரசன் பேசியதாவது;
அரசியலில் புதிது, புதிதாக பலரும் வருவார்கள். அதற்கு எல்லாம் பயப்படவே கூடாது. நாம் எவ்வளவு பேரை பார்த்துள்ளோம். அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும். நாம் அதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை.
இப்போது நிலைமை என்ன என்றால், லாட்டரி சீட்டுக்கும், பிளாக் டிக்கெட்டுக்கும் போட்டி நடக்கிறது. அது சில பேருக்கு புரியும், சில பேருக்கு புரியாது. தமிழகத்தில் எப்படியாவது லாட்டரி சீட்டை கொண்டு வரவேண்டும் என்று துடிக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் அது வேகாது.
2026ல் தி.மு.க., வராது என்று சொல்கிறார்கள். தி.மு.க.,காரர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிவிட்டான் என்றால் வேலையை முடிக்காமல் வரமாட்டார்கள். இப்போது பெற்றுள்ள வெற்றியை விட அதிக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார். அதை செய்யாமல் விடமாட்டோம்.
தி.மு.க., திராவிட மாடல் என்றால் வயிறு எரிகிறது என்கிறார்கள். நம்மை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே, கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கையாக, பொறுப்பாக, கடுமையாக வேலை செய்ய வேண்டும்.
தப்பு, தப்பாக பிரசாரம் செய்கின்றனர். எதிராளிகளுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.