கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது புகார்
கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது புகார்
ADDED : நவ 08, 2024 08:02 PM
ஆவடி:'மதக்கலவரம் ஏற்படும் வகையில் பேசிய, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவரான ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்' என, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச்செயலரும், வழக்கறிஞருமான ஷேக் முஹம்மதுஅலி, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் அளித்த புகார்:
காஷ்மீரில் ராணுவத்தால் கொல்லப்பட்ட புர்ஹான்வானி என்பவருக்காக, சென்னையில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும், வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவனும் அஞ்சலி கூட்டம் நடத்தினர் என்ற பொய்யான செய்தியை, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெஷ்.ராஜா, பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அவரது பேட்டி பல்வேறு தொலைக்காட்சிகளில், சமூக வலைதளங்களில் பரவி, நாட்டில் மது துவேஷத்தை துாண்டி, சமூகங்களுக்கு இடையில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டுகூட, சிவகார்த்திகேயன் தந்தை இறப்புக்கு ஜவாஹிருல்லா தான் காரணம் என, பொய்யான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பினார். ஆகையால், ஹெச்.ராஜா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.