ADDED : ஏப் 14, 2025 05:42 AM

சென்னை : 'தமிழக பா.ஜ., தலைவர் அறிவுறுத்தலை ஏற்று, காலணி அணியத் துவங்கி இருக்கிறேன். மற்றவர்களும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்' என, முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும், மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த நான்கு மாதங்களாக, நான் உட்பட பா.ஜ., சகோதர - சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதம் மேற்கொண்டோம்.
நேற்று முன்தினம், பா.ஜ., மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், நம் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தி.மு.க., ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் துவங்கி இருக்கிறேன்.
என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த, பா.ஜ., சகோதர - சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, நயினார் நாகேந்திரனின் அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

