ADDED : ஜூன் 24, 2025 11:12 PM
சேலம்,:மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள், பெரும்பாலும் கணினி வழியில் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெற, தொடர்ந்து கணினியில் பயிற்சி பெறுவது அவசியம்.
அதற்கேற்ப தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினிவழி கல்வி வழங்க, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 'ஹைடெக் லேப்' எனும், கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு, இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, பாடம் சார்ந்த மதிப்பீட்டு தேர்வுகளை கணினியில் தொடர்ந்து நடத்தும்படி, கால அட்டவணை, வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு பாடத்துக்கு ஐந்து வினாக்கள் வீதம், சம்பந்தப்பட்ட ஆசிரியர் வினாக்கள் தயாரித்து, 10ம் வகுப்பு வரை, ஐந்து பாடங்களுக்கு 25 வினாக்கள் கொடுத்து தேர்வு நடத்தவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஆறு பாடங்களுக்கு தேர்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கு, பாடத்தில் இருந்து உயர்திறன் கேள்விகளுக்கு பதில் அளிக்க மாணவர்களை பழக்கும்படி, வினாடி - வினாவாக நடத்தப்பட உள்ளது.