ADDED : அக் 28, 2024 01:15 AM
விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில், 85 ஏக்கர் திடலில் மாநாடு நடந்தது. மேடை கிழக்கு பார்த்து அமைக்கப்பட்டு இருந்தது
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வாகனங் கள் நிறுத்த, வி.சாலையில் இரண்டு இடங்களில் 47 ஏக்கர், கீழக்கொந்தையில் சாலைக்கு கிழக்கே 120 ஏக்கர், சித்தணியில் 40 ஏக்கர் என மொத்தம், 207 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது
மாநாட்டில் பங்கேற்க அதிகாலை முதலே, 20 முதல் 35 வயதுடைய தொண்டர்கள் குவிந்தனர். விக்கிரவாண்டி முதல் வி.சாலை வரை 4 கி.மீ., துாரத்திற்கு தொண்டர்கள் சாரை சாரையாக நடந்தே வந்தனர்
காலை 9:00 மணி முதல் நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
மாநாட்டிற்கு வந்த வாகனங்கள் அனைத்தையும், உளவுத்துறை போலீசார் டோல்கேட்டில் அமர்ந்து கணக்கெடுத்தனர்
விஜய், மாநாட்டிற்கு வரும் போதும், 'ரேம்ப் வாக்' செய்யும் போதும், அரசு ஊழியர்கள் யாராவது செல்பி எடுக்கின்றனரா என்றும், உளவுத்துறை போலீசார் கண்காணித்தனர்
மாநாட்டில், 'ட்ரோன்' வாயிலாக படம் எடுத்தால், அதை கண்காணித்து ட்ரோனை 'கிராஷ்' செய்தனர்
மாநாட்டு திடலில் அமர்ந்திருந்த தொண்டர்கள், 200 பேருக்கு மேல் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த கிளினிக் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது
மாநாட்டில் பங்கேற்க 3 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்
பகல் 2:30 மணியிலிருந்து கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு துவங்கியது
மாநாட்டில் தொண்டர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததை அறிந்த விஜய், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, 4:00 மணிக்கு துவங்க வேண்டிய மாநாடு, 3:00 மணிக்கு துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
மாநாட்டு திடலில் மயக்கம் அடைந்தவர்களை, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
