பங்குப்பேரவை தேர்தல் மோதல்; சர்ச்சை பாதிரியார் கார் உடைப்பு
பங்குப்பேரவை தேர்தல் மோதல்; சர்ச்சை பாதிரியார் கார் உடைப்பு
ADDED : ஜன 14, 2025 11:29 AM

நாகர்கோவில்: பங்கு பேரவை தேர்தல் பிரச்னையில், சர்ச்சை பேச்சு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் கார் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் சர்ச் உள்ளது. இதன் பங்குப் பேரவை தேர்தல் தக்கலை புனித எலியாக்கியர் சர்ச் வளாகத்தில் குழித்துறை மறை மாவட்ட நிர்வாகிகளால் நடத்தப்பட்டது. இதில் இரண்டு அணிகள் போட்டியிட்டன.
தோல்வியடைந்த அணியைச் சேர்ந்த சிலர் இரவில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இல்லத்திற்கு சென்று தகராறு செய்து அவரது காரை அடித்து நொறுக்கினர். இதில் காரின் முன் பக்க கண்ணாடி நொறுங்கியது.
ஜார்ஜ் பொன்னையா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தி.மு.க., மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ராஜேந்திர ராஜ், ஜஸ்டின் ஆகியோரை கைது செய்தனர்.
ஏற்கனவே சர்ச்சையாக பேசி சிக்கியவர் ஜார்ஜ் பொன்னையா என்பது குறிப்பிடத்தக்கது.

