த.வெ.க.,வுடன் தான் கூட்டணி: பிரவீன் சக்கரவர்த்தியிடம் காங்., நிர்வாகிகள் வலியுறுத்தல்
த.வெ.க.,வுடன் தான் கூட்டணி: பிரவீன் சக்கரவர்த்தியிடம் காங்., நிர்வாகிகள் வலியுறுத்தல்
UPDATED : ஜன 07, 2026 12:08 AM
ADDED : ஜன 07, 2026 12:06 AM

'த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும்' என, காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியிடம், கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கடந்த 4ம் தேதி நடந்தது.
உதாசீனம்
அதில் அப்பிரிவின் அகில இந்திய தலைவர் அனில் ஜெய்ஹிந்த், காங்., அகில இந்திய செயலர் ஜிதேந்திர பாகேல், தமிழக காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் நவீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அக்கூட்டம் முடிந்தபின், சென்னையில் தங்கியிருந்த பிரவீன் சக்கரவர்த்தியை, அனில் ஜெய்ஹிந்த், ஜிதேந்திர பாகேல், நவீன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.
இத்தகவலை தன் எக்ஸ் பக்கத்தில் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளார். அந்த சந்திப்பின்போது, 'மதசார்பற்ற சக்திகள் இணைந்து, மதசார்புள்ள பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்பதற்கான ஒற்றை நோக்கத்துடனேயே, தொடர்ந்து தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம்.
'ஆனால், வேறு வழியின்றி கூட்டணியில் அங்கம் வகிப்பதாக தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அதனாலேயே, காங்கிரஸ் கட்சியை தி.மு.க., துச்சமாக மதிக்கிறது. 'என்ன தான் அக்கட்சிக்கு நாம் விசுவாசமாக இருந்தாலும், அவர்கள் நம்மை எல்லா விஷயங்களிலும் உதாசீனப்படுத்துகின்றனர்.
'அதேபோல, நம் பலம் அறிந்தும், நமக்கு உரிய 'சீட்'களை ஒதுக்க தி.மு.க., தரப்பு தயாரில்லை. அக்கட்சியோடு கூட்டணியாக தொடர, காங்., அடிமட்டத் தொண்டன் வரை யாருக்கும் விருப்பமில்லை. 'அதனால், தி.மு.க.,வோடு கூட்டணியை தொடர வேண்டாம். த.வெ.க., வளர்ந்து வரும் கட்சியாக இருக்கிறது. அதனால், அக்கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும்.
'நீங்கள் அந்த முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது கட்சியினர் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், உங்கள் முயற்சி வெற்றியடைய வேண்டும்.
ஒட்டுமொத்த கருத்து
'அதற்கு, தமிழக காங்கிரசார் அனைவரும் உறுதுணையாக இருப்போம். எங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தை ராகுலிடமும் தெரிவிக்க வேண்டும்' என, பிரவீன் சக்கரவர்த்தியிடம், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என, மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அவர் ஆதரவாளர் நவீன் என்பதால், அவரும் 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என விரும்புகிறார்.
நவீன் ஏற்பாட்டில் தான், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களையும், பிரவீன் சக்கரவர்த்தியையும் சந்தித்துள்ளனர். அப்போது, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசி, அதை தமிழக காங்கிரசின் ஒட்டுமொத்த கருத்தாகவும் வலியுறுத்தியுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

