பழுதான லிப்டில் பரிதவித்த எம்.பி.,; ஒரு மணி நேரம் போராடி மீட்பு
பழுதான லிப்டில் பரிதவித்த எம்.பி.,; ஒரு மணி நேரம் போராடி மீட்பு
ADDED : பிப் 16, 2025 04:15 PM

கடலுார்: வடலுார் விடுதிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத், பழுதான லிப்டில் ஒரு மணி நேரம் சிக்கி பரிதவித்தார். தீயணைப்பு வீரர்கள், கதவை உடைத்து எம்.பி.,யை மீட்டனர்.
கடலுார் தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஷ்ணு பிரசாத். வடலுாரில் நடந்த கிராம காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார். அங்கிருந்த விடுதி லிப்டில் அவரும், கட்சி மூத்த நிர்வாகிகளும் இரண்டாம் தளத்துக்கு சென்றபோது, லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது.
இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுதி ஊழியர்கள், அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். முடியாத நிலையில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, கடலுாரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் ஒரு மணி நேரம் போராடி முடியாத நிலையில், கதவை உடைத்து திறந்து, உள்ளே இருந்தவர்களை மீட்டனர். லிப்டில் மயங்கி விழுந்த நிலையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இருவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய சிறிய லிப்டில் 6 பேர் சென்றதே, லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.