ADDED : ஆக 22, 2011 06:07 PM
இந்தியாவின் பாரம்பரியப் பெருமை மிக்க நான்கு நூலகங்களில் ஒன்று சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா நூலகம். மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா மூலம் 1890ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, 1896ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. கன்னிமாராவின் பெயரே இந்நூலகத்திற்கும் வைக்கப்பட்டது.
இந்நூலகம் 1930ம் ஆண்டு வரை பிரிட்டிஷ்காரர்களின் மேற்பார்வையில் செயல்பட்டது. அதன் பிறகு இந்திய நூலக அதிகாரியின் மேற்பார்வையில் இயங்கியது. நூல்களை உள்ளே வந்து படிக்கவும், எடுத்துச்சென்று படிக்கவும் அனுமதிக்கப்பட்டது.1950 ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பொது நூலகத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரப்பட்டது.
துவங்கப்பட்ட காலத்தில் ஆங்கில நூல்களே அதிகமாக இருந்தன. உலக நாடுகள் சிலவற்றின் வரலாறுகள், ஆங்கில ஆட்சி முறை பற்றிய குறிப்புகள், ஓவியங்கள், பைபிள்கள் இருந்துள்ளன. இந்நூலகத்தில் 1553ம் ஆண்டிலிருந்து தற்போது வரை வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் அச்சிடப்பட்ட ஏராளமான அரிய நூல்கள் இருப்பது சிறப்பு.
ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமஸ்கிருதம், உருது, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பெங்காலி என 12 மொழிகளில் 7 லட்சத்து 27 ஆயிரம் நூல்கள் இங்குள்ளன. 1 லட்சத்து 27 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்டுள்ள, இந்நூலகத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் வாசகர்கள் எண்ணிக்கை, லட்கணக்கில் அதிகரித்து வருகிறது.
இலக்கியம், வரலாறு, கலை, கலாசாரம், மருத்துவம்,பொறியியல், அறிவியல், கணிதம், அரசியல் மற்றும் ஆராய்ச்சிகள் என அனைத்து துறைகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளவும், சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவுகிறது.
இந்நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் தலைப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தபடியே நூல் பற்றிய விவரங்களை இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்து கொண்டு,நேரில் வந்து நூல்களை படிக்க முடியும். கண்தெரியாதவர்கள் மற்றும் காதுகேட்காதவர்கள் படிப்பதற்கு ஏதுவாக பிரெய்லி மற்றும் ஆடியோ வழியாக படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
கன்னிமாரா நூலகத்தின் முன் பகுதியில் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கு ஏதுவாக, இரண்டு இணைப்பு மூன்று மாடிக் கட்டடங்கள் 1973 மற்றும் 1999ம் ஆண்டுகளில் 93 ஆயிரத்து 523 சதுர அடிப்பரப்பில் கட்டப்பட்டுள்ளன.
நூலகத்திற்கு தினசரி 2,000 பேர் வரை வந்து செல்கின்றனர்.1,500 பேர் வரை சந்தாதாரர்கள் நூல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றும் படிக்கின்றனர். இந்தியாவில் எந்த மாநிலத்தில் நூல்கள் வெளியிடப்பட்டாலும். அந்நூல்கள் இந்நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கன்னிமாரா நூலகத்திற்கு தினசரி 200 நாளிதழ்கள் வருகின்றன. இந்நூலகத்தில் உள்ள நூல்கள். இந்த ஆண்டு 22 லட்சத்து 44 ஆயிரத்து 912 வாசகர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அறிவுப் பெட்டகமாக திகழும் கன்னிமாராவிற்கு அழைப்பிதழ் இல்லாமல், விழா நடத்தாமல், அறிவை அள்ளிச்செல்ல தினசரி ஆயிரக்கணக்னோர் ஆர்வத்துடன் வந்து செல்வதால், ஆண்டில் 365 நாளும் கன்னிமாராவில் அமைதி வழியில் அறிவுத் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க சொல்லலாம்.
ஆச்சர்யம் ஏற்படுத்தும் அரிய நூல்கள்
கன்னிமாரா நூலகத்தில், 1553ம் ஆண்டு லத்தீன் மொழியில் அச்சிடப்பட்ட மிக பழமையான நூலும், 1578ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட கிரேக்க மொழியில் அச்சிடப்பட்ட பிளாட்டோவின் தத்துவங்கள் நூல், அரபி மொழியிலிருந்து, லத்தீன் மொழியில் 1678ம் ஆண்டு அச்சிடப்பட்ட நூல், 1978ம் ஆண்டு தமிழகத்தில் தரங்கம்பாடியில் அமைக்கப்பட்ட முதல் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்ட, 'ஞானமுறைகளில் விளக்கம்' என்ற நூலின் ஜெராக்ஸ் பிரதி, வீரமா முனிவரால் (பெஸ்கி) 1822ம் ஆண்டு எழுதப்பட்ட செந்தமிழ் இலக்கண நூல், தமிழ், ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள நூல் மற்றும் ஏராளமான அரிய நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் உள்ள ஓவியங்கள், குறியீடுகள், வழிகாட்டுதல்கள், சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.
