ஒரு லட்சம் வீடுகள் கட்டுமானம்; மார்ச் 31க்குள் முடிக்க உத்தரவு
ஒரு லட்சம் வீடுகள் கட்டுமானம்; மார்ச் 31க்குள் முடிக்க உத்தரவு
ADDED : நவ 11, 2024 06:31 AM

சென்னை ; 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் கட்டப்படும், ஒரு லட்சம் வீடுகளை, மார்ச் 31க்குள் கட்டி முடிக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில், 2030ம் ஆண்டிற்குள், குடிசைகள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, ஊரகப் பகுதிகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, நடப்பாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிற்கும், 3.50 லட்சம் ரூபாய் அரசால் செலவு செய்யப்பட உள்ளது.
இதற்காக, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 3,500 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப, தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை அமைக்கப்பட்ட நிலை, பணி முடிந்த பின் என, நான்கு தவணைகளில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மானிய நிதி விடுவிக்கப்படுகிறது.
வீடு கட்டுவதில் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில், குறைந்த விலையில் டான்செம் வாயிலாக, சிமென்ட் மூட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
கட்டுமான கம்பி, ஒப்பந்ததாரர்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. அதற்கான தொகை, பயனாளிக்கு வழங்கப்படும் தவணை தொகையில் பிடித்தம் செய்யப்படும்.
தற்போது கட்டப்படும், ஒரு லட்சம் வீடுகளுக்கு, 2025 ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் கிரகப்பிரவேசம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு வசதியாக, மார்ச் 31க்குள் கட்டுமான பணிகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பணிகளை விரைவுபடுத்தும் நடவடிக்கையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.