மூன்றாவது முறையாக அமைக்கப்பட்ட குழு; ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு
மூன்றாவது முறையாக அமைக்கப்பட்ட குழு; ஓய்வூதிய திட்டம் குறித்து கருத்து கேட்பு
ADDED : ஆக 19, 2025 05:55 AM

சென்னை : சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் குழுவினர், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் முதற்கட்ட கருத்து கேட்பு கூட்டத்தை நேற்று நடத்தினர்.
தமிழகத்தில் மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதை ஏற்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சிறந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், ஆறு மாதங்களுக்கு முன் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர், நான்கு கட்டங்களாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்க முடிவெடுத்துள்ளனர்.
முதற்கட்ட கருத்து கேட்பு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் இருவர் வீதம் அனுமதிக்கப்பட்டு, மூன்று நிமிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
இதை தொடர்ந்து, வரும் 25ம் தேதி, செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில், அடுத்தகட்ட கருத்து கேட்பு கூட்டம் நடக்கவுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் கூறியதாவது:
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அன்று முதல், அதை எதிர்த்து போராடி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய, ஜெயலலிதா தலைமையிலான அரசு, சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தது; அவர் அறிக்கை கொடுக்கவில்லை.
இதையடுத்து, மற்றொரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்காமல் இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு, பழனிசாமி ஆட்சியில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது; நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; அந்த அறிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. இப்போது, ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
காலம் கடத்தாமல், செப்டம்பர் மாதத்திற்குள் இந்த குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அரசும் அதே வேகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, தீபாவளி பரிசாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.