தொடரும் செந்நாய் மரணங்கள்: வனவிலங்கு ஆர்வலர்கள் அதிருப்தி
தொடரும் செந்நாய் மரணங்கள்: வனவிலங்கு ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : அக் 19, 2024 06:39 AM

கூடலுார்: மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி ஆகியவை தாவர உண்ணிகள் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க காரணமாக உள்ளன. இவை இறப்பதால், தாவர உண்ணிகள் அதிகரித்து உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். இதனால் மாமிச உண்ணிகளை பாதுகாப்பது அவசியம்.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூர் வனப்பகுதியில், இரண்டு மாதங்களில், மூன்று செந்தாய்கள் உயிரிழந்துள்ளன. அவற்றில், இரண்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதால், இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொன்று, உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.
உணவு சங்கிலியில் முக்கிய பங்காற்றி வரும் செந்நாய்கள் உயிரிழப்பும், இதை தடுக்க வனத்துறையின் ஆர்வம் காட்டாமல் உள்ளதும், வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் கூறுகையில், ''செந்நாய்கள் வனப்பகுதியில் ஏன் இருக்க வேண்டும் என்பது குறித்தும்; அதை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கிராமங்களில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.