வட இந்திய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: திமுக அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
வட இந்திய பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: திமுக அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு
UPDATED : செப் 26, 2025 06:56 PM
ADDED : செப் 26, 2025 03:02 PM

திமுக அமைச்சர்கள் சர்ச்சையாக பேசி, விமர்சனங்களுக்குள் சிக்கிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. ஓசி பஸ், ஓசி பயணம் என்பது போல, பல ஏளன கருத்துகளை கூறி வருகின்றனர். திமுக வேலூர் எம்பி கதிர் ஆனந்த், ' எங்கு பார்த்தாலும் பளபள வென்று தெரிகிறது. எல்லோரும் ' பேர் அன்ட் லவ்லி', 'பான்ட்ஸ் பவுடர்' போட்டு 'சிங்கார் கும்கும்' வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். எல்லாம் ஆயிரம் ரூபாய் செய்யும் வேலை ' என்று பேசினார். இத்தகைய பேச்சுக்கு பலரும் எதிர்வினை ஆற்றினாலும் திமுக.,வினரின் அநாகரிக பேச்சு நின்றபாடில்லை. வட இந்தியர்களைப் பற்றி ஏற்கனவே ‛‛பானி பூரி விற்க வந்தவர்கள்'' என்று பேசினார்கள். இப்போது இன்னொரு சர்ச்சை கிளம்பி உள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நேற்று (செப்.,25) நடைபெற்ற விழாவில் திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், ''தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், மற்ற மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண்களை மனிதர்களாக கூட கருதாமல் இருந்துள்ளனர். இன்றைக்கும் கூட வட இந்தியாவில் அதே நிலை நீடிக்கிறது.
வட இந்தியாவில் ஒரு பெண்ணிடம் சென்று, 'உங்கள் கணவர் எங்கு பணியாற்றுகிறார்?' என்ற கேள்வியே கேட்க முடியும். அதுவே, தமிழகத்தில் உள்ள பெண்களிடம், 'நீங்கள் எங்கு பணியாற்றுகிறீர்கள்?' என கேட்கலாம். இது ஒரே இரவில் நடந்துவிடவில்லை. தமிழகத்தில் நூறாண்டு காலமாக கொண்டுவரப்பட்ட மாற்றத்தால் நிகழ்ந்தது'' எனப் பேசினார்.
இவரது பேச்சு, வட இந்திய பெண்கள் இன்னும், கணவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், அங்கு இன்னும் பெண்களை மதிப்பதில்லை என்பது போலவும் வெளிக்காட்டுவதாக பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
பாஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனவலா கூறுகையில், ''மீண்டும் ஒருமுறை திமுக தனது எல்லையை கடந்துவிட்டது. மீண்டும் உ.பி., பீஹார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை அவமானப்படுத்தியுள்ளது'' என்றார்.
டி. ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.