விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மகளுக்கு அரசு வேலை என தற்காலிக பணி தந்ததால் சர்ச்சை
விபத்தில் தாயை இழந்த பார்வையற்ற மகளுக்கு அரசு வேலை என தற்காலிக பணி தந்ததால் சர்ச்சை
ADDED : டிச 03, 2025 07:11 AM

கடையநல்லுார் பஸ் விபத்தில் தாயை இழந்த மாற்றுத்திறனாளி மகளுக்கு, அரசு வேலை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, நகராட்சியில் தற்காலிக பணி வழங்கி யது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லுார், துரைச்சாமிபுரம் அருகே கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த வாரம் இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் பலியாகினர்.
இதில் புளியங்குடியை சேர்ந்த மல்லிகா, 55, என்பவரும் அடக்கம். அவரது மகள் கீர்த்திகா, 33, பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், 5 வயதில் தந்தையை இழந்தவர். தற் போது தாயையும் இழந்த நிலையில், 'எனக்கு யாரும் இல்லை. நிவாரணமும், வேலை வாய்ப்பும் வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார் .
இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, முதல்வர் ஸ்டாலின், கீர்த்திகாவை மொபைல் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது, 'வேண்டிய உதவி செய்யப்படும்' என, உறுதியளித்தார்.
அதன்படி, தென்காசி கலெக்டர் கமல் கிஷோர், கீர்த்திகா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, புளியங்குடி நகராட்சியில், 'டேட்டா என்ட்ரி' பணிக்கான ஆணையை வழங்கினார்.
தனக்கு எம்.ஏ., - பி.எட்., தகுதி இருப்பதாகவும், கல்விக்கு ஏற்ற நிரந்தர அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கீர்த்திகா மனு அளித்தார்.
நகராட்சி கமிஷனர் நாகராஜ் கூறுகையில், “நேரடியாக நிரந்தர அரசு பணி வழங்கப்படுவதில்லை. கீர்த்திகாவின் வாழ்வாதாரம் கருதி தற்போது மாதம், 12,000 ரூபாய் ஊதியத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் மாறினாலும், அவரது பணி தொடரும் .
''அவரது விருப்பப்படி ஆசிரியை பணி கிடைத்தால் செல்லலாம். புளியங்குடி நகராட்சியிலேயே நிரந்தர பணியிடம் காலியானால் அவரை நியமிக்க வாய்ப்புள்ளது. அவர் மீது அரசு கருணையுடன் நடந்து கொள்ளும்,” என்றார்.
- நமது நிருபர் -

