ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற குன்னூர் நகராட்சி கமிஷனர் உட்பட இருவர் கைது
ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற குன்னூர் நகராட்சி கமிஷனர் உட்பட இருவர் கைது
UPDATED : ஜன 20, 2026 10:43 PM
ADDED : ஜன 20, 2026 10:29 PM

குன்னூர்: பழைய கட்டடம் புதுப்பிக்க அனுமதி லைசன்ஸ் பெற, 6 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, முதல் கட்டமாக 2 லட்சம் ரூபாய் வாங்கிய குன்னூர் நகராட்சி கமிஷனர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம்பரதி, 39. கடந்த 2024ம் ஆண்டு பொறுப்பேற்றார். இவர் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று அனுமதி அளிப்பதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பு ஏற்றார். கோத்தகிரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் 2500 சதுர அடியில் தனது கடையை புதுப்பிக்க டி.டி.சி.பி., விண்ணப்பித்துள்ளார்.
இதற்காக லைசென்ஸ் பெற கோத்தகிரியில் கமிஷனர் இளம்பருதியை ரமேஷ் சந்தித்தார். லைசன்ஸ் பெற ரூபாய் 6 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதில் குறைக்கும் படி கேட்ட போது, குன்னூரில் இதனை விட அதிகம் லஞ்சம் வாங்குவதாக கூறியதுடன் 5 லட்சம் ரூபாயும், அதில், முதற்கட்டமாக, ரூபாய் 2 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
இதனால், ரமேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். ரசாயனம் தடவிய 2 லட்சம் ரூபாயை குன்னூரில் நகராட்சி கமிஷனர் வீட்டில் இன்று ரமேஷ் கொடுத்தார். அங்கு இருந்த ஜூனியர் அசிஸ்டன்ட் விக்னேஷ், 26 பணத்தைப் பெற்று கமிஷனரிடம் கொடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உடனடியாக சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

