தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்
தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்
ADDED : நவ 27, 2024 07:48 PM

சென்னை: நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நடிகர் ரஜினி மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து மணந்தார். இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022ல் அறிவித்தனர். இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் நேரில் ஆஜராக, மூன்று முறை உத்தரவிட்டும், தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாததால், சேர்ந்து வாழப்போவதாக தகவல் பரவியது.
கடந்த 21ம் தேதி வழக்கு நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினார். பின், 'இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. 'இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீர்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா' என்று, நீதிபதி கேட்டார்.
அதற்கு இருவருமே, 'எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்' என்று தெரிவித்தனர். இதை பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் வரும் 27ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, அறிவித்தார்.
இதனையடுத்த, ஒருமித்த கருத்து அடிப்படையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.