'வக்ப்' உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது கோர்ட்
'வக்ப்' உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்தது கோர்ட்
ADDED : ஜன 11, 2026 03:50 AM

சென்னை: தமிழக வக்ப் வாரிய உறுப்பினர்கள் பணிகளை மேற்கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக வக்ப் வாரியத்துக்கு, தலைவர் உட்பட 10 பேரை நியமனம் செய்து, கடந்த நவ., 28ல், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை சாந்தோம் பகுதியைச் சேர்ந்த ஒய்.சவுகத் அலி முகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'வக்ப் வாரிய சட்டத்தின்படி, வாரியத்துக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களில், முஸ்லிம் அல்லாத இருவர், சட்டத்துறையை சேர்ந்த ஒருவர் இடம்பெற வேண்டும். ஆனால், வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் அவ்வாறு இடம்பெறவில்லை.
எனவே, இந்த உறுப்பினர்கள் தங்கள் பணியை தொடர தடை விதிக்க வேண்டும். அரசின் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் எம்.புரு சோத்தமன் ஆஜராகினர்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வக்ப் வாரிய சட்டப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சட்டத்துறையை சேர்ந்த ஒருவர், முஸ்லிம் அல்லாத இருவர் பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப்படவில்லை.
சட்ட விதிகளின்படி, இந்த நிபந்தனை பூர்த்தி செய்யப்படவில்லை என்பதற்கான முகாந்திரம் உள்ளது. இதை கருத்தில் வைத்து, வாரிய சட்டத்தின் கீழ் தற்போது நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது.
மேலும், மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்.விசாரணை, வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

