ADDED : ஆக 08, 2026 06:23 AM
சென்னை: ''தமிழகத்தில் நடப்பாண்டு பயிர் காப்பீடு செய்யும் பரப்பு, 44 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, வேளாண்துறை அமைச்சர் வினோத் கூறினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் அனைத்து பயிர்களையும், காப்பீடு திட்டத்தில் கொண்டு வர, அரசு முயற்சி செய்து வருகிறது.
நடப்பாண்டு 3.98 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களுக்கு , 1.34 லட்சம் விவசாயிகள், பயிர் காப்பீடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 2.77 லட்சம் ஏக்கரிலான பயிர்களுக்கு, 1.05 லட்சம் விவசாயிகள் காப்பீடு செய்திருந்தனர்.
கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 44 சதவீதம் பயிர் காப்பீடு பரப்பு அதிகரித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில், 17 லட்சம் ஏக்கர் சம்பா நெல் பயிர்களை காப்பீடு செய்வதற்கு, 540 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இதில், 440 கோடி ரூபாய் காப்பீடு மானியத்தை, மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மீதமுள்ள தொகையை, விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு செய்வதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
