ADDED : செப் 22, 2023 06:46 AM

சென்னை : போதைப்பொருள் கடத்தல், ஆபாச வீடியோ அழைப்பு, பாலியல் தொழில் என, பல்வேறு வகையான மோசடியில் ஈடுபடும் நைஜீரிய கும்பலை பிடிக்க, தனிப்படை போலீசார், தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில், உடல் உறுப்புகள் விற்பனைக்கு இருப்பதாக, மர்ம நபர்கள், இணையதளத்தில் விளம்பரம் செய்தனர்.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து, கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பதுங்கி இருந்த, நைஜீரியா மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த ஒலிவியா என்ற பெண் உட்பட, நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்கள், கூட்டாளிகளுடன் சேர்ந்து, நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கு, 5 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து, மோசடி செய்தது தெரிய வந்தது.
மேலும், ஆபாச வீடியோ அழைப்பு, செயலி வாயிலாக, பாலியல் தொழிலாளிகள் போல நடித்து பணம் பறிப்பு, 'ஆன்லைன்' வாயிலாக ஆயத்த ஆடைகள் விற்பனை என, பல்வேறு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இவர்களின் கூட்டாளிகள், சென்னையை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதும், போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரிய கும்பலை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அவர்களின் தேடுதல் வேட்டையில், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, 7 லட்சம் ரூபாய் மெத்தாபெட்டமைன் எனும் போதைப் பொருளுடன் நைஜீரிய வாலிபர் இசபுல்லா, 25, சிக்கினார்.
'நைஜீரிய மோசடி கும்பலில், ஆறு பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்து, '10581' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 94981 10581 மொபைல் போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்' என, போலீசார் தெரிவித்தனர்.

