பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த டில்லி ஆசாமிக்கு 6 ஆண்டு சிறை; 35 நாட்களில் தீர்ப்பு
பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த டில்லி ஆசாமிக்கு 6 ஆண்டு சிறை; 35 நாட்களில் தீர்ப்பு
ADDED : மார் 17, 2025 10:32 PM

கோவை; பெண் இன்ஜினியரிடம், 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், டில்லி ஆசாமிக்கு, 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் 35 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோவை மாவட்டம், சூலுாரை சேர்ந்த பெண் இன்ஜினியர் மொபைல் போனிற்கு, கடந்த 2024, நவ.,18 அன்று தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. கூரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறிய நபர், அந்த பெண் பெயருக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதற்குள் போதை பொருள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மும்பை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உள்ளதால், அந்த பெண்ணின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டார். பிறகு அந்த நபரின் வங்கி கணக்கிற்கு, 10 லட்சம் ரூபாய் பணம் அனுப்புமாறு கூறினார். இதனால் பயந்த அந்த பெண், மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அவர் கேட்ட பணத்தை அனுப்பினார். சில நிமிடங்களில் பணம் திரும்பி வந்துவிடும் என்றார். ஆனால், அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், கோவை மாவட்ட சைபர் கிரைமிற்கு புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கையில், நுாதன மோசடியில் ஈடுபட்டது டில்லி, கோவிந்த்புரியை சேர்ந்த கோபிகுமார், 42, என்று தெரிய வந்தது. டில்லி சென்ற தனிப்படையினர் கோபிகுமாரை கைது செய்தனர்.
டில்லியில் 'காம்பேக்ட் கார்ப்பரேசன் லிமிடெட் ' என்ற பெயரில் இரண்டு நிறுவனம் நடத்தி வந்த அந்த நபர், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மேலும் பலரிடம், 29.14 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இவர் மீது, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில், கடந்த 2025, பிப்., 10 ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், குற்றம் சாட்டப்பட்ட கோபிகுமாருக்கு, மொத்தம் 6 ஆண்டுகள் சிறை, 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 35 நாட்களில் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.