பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த மிகப்பெரிய பாதிப்பில்லை: அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்
பெஞ்சல் புயலால் எதிர்பார்த்த மிகப்பெரிய பாதிப்பில்லை: அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்
ADDED : நவ 30, 2024 10:10 PM

சென்னை: பெஞ்சல் புயல் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: புயல் கரையை கடந்து வருகிறது. சென்னையில் காற்றின் வேகமும், மழையின் அளவும் குறைந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் 143 நிவாரண முகாம்களில் 4,904 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 56 சமையல் கூடங்களில் 3.23 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 7 செ.மீ., முதல் 10 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் ஆவணியாபுரத்தில் 27 செ.மீட்டரும், மரக்காணத்தில் 22 செ.மீட்டரும், செங்கல்பட்டு ஆத்தூரில் 25 செ. மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணத்தை அறிவித்துள்ளார்.
மொத்தம் 21 சுரங்கப்பாதைகள் சென்னையில் உள்ளது. அதில் 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. அதில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, நாளை காலையே மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகளில் மொத்தம் 2,648 புகார்கள் வந்தன. அதில், 2,624 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு விட்டது. 2,904 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 18 குழுக்கள் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18,500 தன்னார்வலர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பிற மாவட்டங்களில் பெய்துள்ள மழையின் விபரம் மற்றும் பாதிப்புகளை காலையில் தெரிவிப்பேன்.
எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சென்னை வானிலை ஆய்வு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புயல் கரையை கடக்கும் போது, சரியான தகவலை கொடுத்துள்ளனர், எனக் கூறினார்.