சென்னைக்கு 420 கிமீ தென்கிழக்கே மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
சென்னைக்கு 420 கிமீ தென்கிழக்கே மோந்தா புயல்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
UPDATED : அக் 27, 2025 10:43 PM
ADDED : அக் 27, 2025 01:24 PM

சென்னை: மோந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (அக் 27) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் மோந்தா புயல் உருவானது.
தற்போது அந்தமான் தீவுகளின் போர்ட் பிளேயரில் இருந்து, மேற்கு, தென்மேற்கிலும் , சென்னையில் இருந்து கிழக்கு, தென்கிழக்கில் 420 கி.மீ., தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது. மோந்தா புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக நாளை மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
ஆரஞ்சு அலெர்ட்
மோந்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (அக் 27) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (அக் 28)
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக் 28) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை (அக் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* தேனி
* தென்காசி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
மீனவர்கள் எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு பலத்த சூறாவளிக்காற்று வீசலாம். எனவே, மீனவர்கள் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை கூண்டு
வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

