வங்கக்கடலில் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: 11 மாவட்டங்களில் இன்று மழை
வங்கக்கடலில் 'சென்யார்' புயல் உருவாக வாய்ப்பு: 11 மாவட்டங்களில் இன்று மழை
UPDATED : நவ 24, 2025 07:03 AM
ADDED : நவ 24, 2025 06:08 AM

சென்னை: 'அந்தமான் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 26 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அதே மாவட்டம் ஊத்து 25; காக்காச்சி 23; மாஞ்சோலை 21; துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார், குலசேகரன்பட்டினத்தில் தலா 13; துாத்துக்குடி மாவட்டம் கயத்தாறு 11; காயல்பட்டினம் 10; அதே மாவட்டம் சாத்தான்குளம், தென்காசி மாவட்டம் ஆய்க்குடி மற்றும் செங்கோட்டையில், தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில், நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இன்று, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையலாம். தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து, நாளை மறுநாளான 26ம் தேதி, புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது.
குமரிக்கடல் மற்றும் நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் இலங்கை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில், இன்று பலத்த தரைக்காற்று வீசக்கூடும். தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், வரும் 29 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் இன்று ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெற்கு அந்தமான் கடல், வடக்கு அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

