ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆசை யாரை விட்டது?: ஒரே மாதத்தில் 50 இல்லத்தரசிகளிடம் ‛‛அபேஸ்''
ஆன்லைனில் சம்பாதிக்கும் ஆசை யாரை விட்டது?: ஒரே மாதத்தில் 50 இல்லத்தரசிகளிடம் ‛‛அபேஸ்''
ADDED : பிப் 17, 2025 04:36 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக வேலை தருவதாக கூறி ஒரே மாதத்தில் 50க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகளிடம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.
இப்போது உள்ள காலங்களில் 'வீட்டில் இருந்து வேலை' பிரிவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் போலியான மற்றும் மோசடி செய்வதற்கான அறிவிப்பாகவே இருப்பதும் கவலைக்குரிய விஷயம் தான். குறிப்பாக இல்லத்தரசிகள் வீட்டில் இருந்தே ஏதாவது வேலை செய்து தங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்ற எண்ணத்தில் இதுபோன்ற வேலைவாய்ப்புகளை அதிகம் தேடுகின்றனர். அப்படியான இல்லத்தரசிகளை குறிவைத்தே சில மோசடி பேர்வழிகள் அதிகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், திண்டுக்கல், பழநி, வத்தலக்குண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருமணம் முடிந்து வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் ஏராளமான இளம்பெண்களின் சமூக வலைதள கணக்குகளில் மர்ம நபர்கள், குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை பதிவிடுகின்றனர். இதை நம்பும் இல்லத்தரசிகள், இளம்பெண்கள் அவர்கள் கூறும் டாஸ்க்குகளை செய்து குறைந்த அளவு தொகையை முதலீடு செய்கின்றனர்.
ஆன்லைனில் அவர்கள் கூறும் வேலையையும் செய்து கொடுக்கின்றனர். அதற்கு பரிசு தொகையாக அதிகளவு பணத்தை வழங்கி ஆரம்பத்தில் ஆசையை தூண்டுகின்றனர் மர்ம நபர்கள். இதன் மூலம் நம்பகத்தன்மை அதிகரித்த பெண்கள் கூடுதல் தொகையை மர்ம நபர்களின் வங்கி கணக்கில் முதலீடு செய்கின்றனர். அப்போது பணத்தை 'அபேஸ்' செய்து விட்டு மர்ம நபர்கள் தலைமறைவாகின்றனர். அதன்பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கின்றனர்.
இது தொடர்பாக சிலர் போலீசில் புகாரளித்தாலும், பலரும் வெளியே தெரிந்தால் அவமானம், பிரச்னை எனக் கருதி மவுனமாக கடந்து சென்றுவிடுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் மட்டும் 50 இளம்பெண்கள் மொத்தம் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை ஆன்லைனில் இழந்ததாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தனர். போலீசாரும், ஒருசிலரது வங்கிகணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

