ஜன., 16 வரை தரிசன முன்பதிவு நிறைவு; தினமும் 10 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
ஜன., 16 வரை தரிசன முன்பதிவு நிறைவு; தினமும் 10 ஆயிரம் பேர் ஆப்சென்ட்
ADDED : டிச 06, 2024 07:46 AM
சபரிமலை : சபரிமலை தரிசனம் விர்ச்சுவல் கியூ எனப்படும் ஆன்லைன் மூலம் முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு மூலம், 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 10 ஆயிரம் பேரும் தினமும் அனுமதிக்கப்படுகின்றனர்.
மண்டல, - மகர விளக்கு காலத்தில் ஜன., 17, 18, 19 நாட்களை தவிர்த்தால் மீதமுள்ள அனைத்து நாட்களிலும் முன்பதிவு முடிந்து விட்டது. மண்டல காலம் பாதி மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில், மகர விளக்கு காலத்துக்கான முன்பதிவும் முடிந்துள்ளதால் பக்தர்கள் தரிசன டிக்கெட் கிடைக்காமல் அலை மோதுகின்றனர்.
ஆனால், இருமுடியுடன் வரும் எந்த பக்தரும் தரிசனம் செய்யாமல் திரும்பி செல்ல மாட்டார்கள் என, தேவசம் போர்டு உறுதியாக கூறுகிறது. இதற்காக எருமேலி மற்றும் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களை அதிகரிப்பது பற்றி ஆலோசிக்கிறது.
பம்பையில் ஆறு கவுன்டர்கள் மட்டுமே உள்ள நிலையில், இதை 10 ஆக அதிகரிக்க ஆலோசனை நடைபெறுகிறது என, தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறியுள்ளார்.
இதற்கிடையே, நடப்பு சீசனில் 14 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததில், 2 லட்சம் பேர் ஸ்பாட் புக்கிங்கில் பதிவு செய்து வந்தவர்கள். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களில், தினமும் 8,000 முதல் 10 ஆயிரம் பேர் வரை தரிசனத்திற்கு வராமல் உள்ளனர்.
இவர்கள் தங்கள் பயணத் திட்டத்தை மாற்றினால், முன்பதிவை ரத்து செய்திருந்தால் வேறு பக்தர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என தேவசம்போர்டு பலமுறை கூறியும், பக்தர்கள் அதை செய்யாமல் உள்ளனர்.