ADDED : அக் 22, 2024 03:05 AM

சென்னை : பொதுப்பணி மற்றும் நீர்வள துறையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலியாக பணிபுரிபவர்கள், பணி நிரந்தரம் கேட்டு, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
பொதுப்பணி துறை மற்றும் நீர்வள துறையில் தினக்கூலியாக, 10 முதல் 30 ஆண்டுகள் வரை, 1,500க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அமைச்சர்கள், நீதிபதிகள் பங்களாக்கள் முதல், அரசு அலுவலகங்கள் வரை, துப்புரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளது. அதை நிறைவேற்ற வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்டவர்கள், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணி துறை தலைமை அலுவலக வளாகத்தில், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இதில், தமிழக தொழில்நுட்ப களப்பணியாளர் சங்க மாநில தலைவர் ராமகிருஷ்ணன், துணை செயலர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் 25ம் தேதி வரை போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

