குழந்தை வயிற்றில் பிளாஸ்டிக் டியூப் பெற்றோர் புகாருக்கு டீன் மறுப்பு
குழந்தை வயிற்றில் பிளாஸ்டிக் டியூப் பெற்றோர் புகாருக்கு டீன் மறுப்பு
ADDED : ஜன 05, 2024 12:12 AM
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் 51 நாட்களுக்கு முன் பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் டியூப் இருந்ததாக, பெற்றோர் கூறிய நிலையில், ஸ்கேன் பரிசோதனை மூலம் அது தவறான தகவல் என டீன் ரத்தினவேல் தெரிவித்து உள்ளார்.
முதுகுளத்துாரைச் சேர்ந்த விவசாய தம்பதி லோகநாதன், மீனாட்சிக்கு முதலில் ஆண்குழந்தை உள்ள நிலையில், 2வதாக மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த நவ., 14ல் பெண் குழந்தை பிறந்தது.
மூச்சுத்திணறல், எடை குறைவு இருந்ததால் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.
சொந்த ஊர் சென்ற பின், கடந்த சில நாட்களாக குழந்தை தாய்ப்பால் குடிக்காமல் மூச்சு திணறியதால் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை செய்ததில் குழந்தை வயிற்றில் உணவுக்காக வைக்கப்பட்ட டியூப் அகற்றாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், மீண்டும் மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவில் குழந்தையை அனுமதித்தனர்.
குழந்தைக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் வயிற்றுக்குள் டியூப் இருப்பதாக மருத்துவமனை மீது குற்றம்சாட்டினர்.
இப்பிரச்னை குறித்து டீன் ரத்தினவேல் கூறுகையில், ''குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிறு பகுதிகளை பரிசோதனை செய்ததில் டியூப் இல்லை.
''குழந்தையை முதலில் ஸ்கேன் எடுத்த தனியார் மருத்துவமனை தவறான தகவல் தெரிவித்துள்ளது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளது,'' என்றார்.