தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமின் மறுப்பு
தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமின் மறுப்பு
UPDATED : நவ 14, 2024 12:10 PM
ADDED : நவ 14, 2024 10:47 AM

சென்னை: தெலுங்கர்கள் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. கஸ்தூரியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என மதுரை போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.
கடந்த 3ம் தேதி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, 'ஹிந்து மக்கள் கட்சி' சார்பில், பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நடிகை கஸ்துாரி, 50, பேசுகையில், தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார்.
இதற்கிடையே, 'தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசிய கஸ்துாரி மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் தெலுங்கு அமைப்புகள் புகார் அளித்தன. கஸ்தூரி மீது சென்னை எழும்பூர், மதுரை திருநகர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
போலீசார் தேடி வரும் நிலையில், ஜாமின் கோரி, நடிகை கஸ்தூரி ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று (நவ.,14) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.